Tuesday 10 February 2015

கடன்வாங்கியவனிடம் திருடுவது ; இது மோசடியில் புதுவகை.

சுழி சதவீத வட்டிக்கடன் ஒன்று வாங்கியிருக்கிறேன். காரணம் வேறென்ன என் சுழி சரியில்லாததால்தான்.

சுழி சதவீத வட்டிக்கடன் புரியாதவர்களுக்கு ஜீரோ பர்ஸன்ட் இன்ட்ரஸ்ட்.

33000 ரூபாய் தொலைக்காட்சிக்கு பத்து மாத தவணையாக மாதம் 3300 ரூபாய் கட்டி அடைக்க வேண்டும்.

டிவி வருவதற்கு முன்பே தவணைக்கட்ட வேண்டிய தேதி, தொகை எல்லாம் செல்லுக்கு குறுஞ்செய்தியாக வந்துவிட்டது.

முதல் தவணைக்கு ஐந்து நாள் முன்பாக ஒரு நினைவூட்டல்.

என் வங்கி கணக்கில் பணம் இருக்கிறது என்ற தைரியத்தில் தவணைக்கு முதல் நாள் வந்த செய்தியை நான் முழுமையாக  படிக்கவில்லை. அதிலிருந்துதான் அவர்களுடைய திருவிளையாடல் துவங்கியது.

கணக்கில் கூடுதலாக 700 ரூபாய் பிடித்திருக்கிறார்கள்.  இதை இரண்டு மாதத்திற்கு பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

கேட்டதற்கு இன்சூரன்ஸ் போடப்பட்டிருக்கிறது என்றார்கள். "என் அனுமதியில்லாமல் யார் போட்டார்கள்?" என்றேன்.

தொலைபேசியில் கேட்டதாக சொன்னார்கள். அது எப்படி சாத்தியம்? என்னிடம் கேட்டிருந்தால் இப்போது கேள்வியே எனக்கு வரப்போவதில்லையே? என்றேன்.

மிகக்கடுமையாக கேட்டவுடன் மூன்று தவணை செலுத்தியபிறகு திரும்பத்தருவதாக சொன்னார்கள்.

இப்போது நான்காவது தவணையும் முடிந்துவிட்டது. இன்னும் பணம் வந்தபாடில்லை.

எனக்கு எழுந்த சந்தேகங்கள் :

என் அனுமதியில்லாமல் என் கையெழுத்து இல்லாமல் என் பெயரில் எப்படி இன்சூரன்ஸ் போட்டார்கள்.?

சரி. ஏன் கடைசி வரை இன்சூரன்ஸ் டாக்குமென்ட் எதையும் அனுப்பவில்லை?

என் அனுமதியில்லாமல் என் கையெழுத்து இல்லாமல் என் வங்கிக் கணக்கில் இருந்து எப்படி கூடுதலாக பணம் எடுத்தார்கள்?

ஒரு நாள் தப்பி தவணையை செலுத்தினாலும் அபராதத்தொகை கேட்பவர்கள் என்னிடமிருந்து கூடுதலாக பிடித்த தொகைக்கு அபராதம் செலுத்துவார்களா?

இது போல இன்னும் எத்தனை பேரிடம் செய்திருக்கிறார்கள்

இதைப்படிப்பவர்கள் மேலும் நொந்து கொள்ள இன்னும் ஒரு கூடுதல் தகவல் : சுழி சதவீத கடன் என்ற ஒன்றே மோசடிதான். வட்டியை முன்கூட்டியே பொருளில் ஏற்றிய பிறகுதான் விளம்பரமே கொடுப்பார்கள்.

சரி யார் அவர்கள் என்கிறீர்களா?

என் பணம் திரும்ப வந்ததும் வெளியிடுகிறேன்.  இல்லாவிட்டாலும் நீங்கள் கண்டுபிடித்துவிடலாம். சென்னையில் எந்த ஒரு எலெக்ட்ரானிக்ஸ் ஷோரூம் சென்றாலும் கட்டாயம் இவர்கள் டேபிள் போட்டு உட்கார்ந்திருப்பார்கள்.

கண்டுபிடிக்க முடியாதவர்கள் பஜ்ஜி பிய்த்து மாற்றி சாப்பிடுங்கள்.


2 comments :