Tuesday 24 February 2015

உங்கள் முன் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்பீர்களா?

தலைப்பில் உள்ள கேள்விக்கு பதில் யோசித்த பிறகு அதில் ஒரு வார்த்தை சேர்த்து தருகிறேன். மறுபடி யோசியுங்கள்.

உங்களுக்கு நடக்கும் தவறுகளை, உங்களை ஒருவர் ஏமாற்றினால் அதை தட்டிக் கேட்பீர்களா?

பெரிய அளவில் நடக்கும் தவறுகளை விடுங்கள். சிறிய விஷயங்களைக் கூட கேள்வி கேட்கிற தைரியம் பலருக்கும் இல்லையே.. ஏன்?

டிரைன் டிக்கெட்டுக்காக நீங்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறீர்கள். யாரோ வரிசையை மீறி டிக்கெட் எடுத்துச் செல்கிறார்கள்.  அமைதியாக இருப்பீர்களா? வரிசையில் வரச் சொல்வீர்களா?

கோவிலில் தரிசனத்திற்காக நின்று கொண்டிருக்கிறீர்கள். கதவருகே இருக்கிறவர் சந்நதியை மறைத்துக்கொண்டு நிற்கிறார். என்ன செய்வீர்கள்? நகர்ந்து நிற்கச் சொல்வீர்களா? கிடைத்த கேப்பில் பார்த்துக்கொள்வோம் என்று இருந்து விடுவீர்களா?

மீதிச்சில்லரை தர வேண்டிய நடத்துனர் அதை மறந்தது போல நடந்து கொள்கிறார். கடைசி நிறுத்தத்தில் பஸ் நின்றதும் முதல் ஆளாக இறங்கி பஸ்ஸை விட்டு நகர்ந்து நின்று கொள்கிறார். அப்போது என்ன செய்வீர்கள்?

ஏற்கனவே லாபத்தோடு இருபது ரூபாய்க்கு விற்க வேண்டிய பொருளை இருபத்தைந்து ரூபாய்க்கு விற்கிறார். இது தவறு என்று சொல்வீர்களா?

நமக்கு இழைக்கப்படும் தவறுகளை கூட ஏன் நாம் கேள்வி கேட்க மறுக்கிறோம்?

'ஏமாறுகிற இவ்வளவு பேரும் அமைதியாகத்தானே போகிறார்கள், நாம் மட்டும் ஏன் கத்திக்கொண்டு  இருக்க வேண்டும்.' என்று நினைக்கறீர்களா?

'இவன் ஒருத்தன் மட்டும்தானா  ஏமாற்றுகிறான்?' என்று மன்னித்து விடுகிறீர்களா?

உங்கள் முன் நடக்கும் தவறுகளை தட்டிக்கேட்பீர்களா? என்று என் வலைப்பக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தினேன்.  ஆம் என்றவர்கள் 40 சதவீதம் பேர்.

ஏறத்தாழ 59 சதவீதம் பேர் மனதிற்குள் கொந்தளிப்பேன் என்று பதில் சொல்லியிருந்தார்கள். அதைக்  கொஞ்சமே  கொஞ்சம் வெளியில் காட்டினால் போதும் இவ்வளவு தவறுகள் நடக்காது என்று உறுதியாக நம்புகிறேன்.


ஏமாற்றுபவர்களை கண்டு கொள்ளாமல் இருப்பதும், குறைந்த பட்ச எதிர்ப்பு கூட தெரிவிக்காமல் இருப்பதால், திருட்டிற்கு நாமும்  உடந்தையாகி விடுகிறோம். 

ஊமைகளாக ஏன் மாறிக்கொண்டிருக்கிறோம் ? குரல் எழுப்ப ஏன் தைரியம் வரவில்லை?

எவ்வளவு பெரிய தவறு செய்தவனாக இருந்தாலும் அவனை மண்ணியுங்கள். ஆனால் செய்தது தப்பு என சுட்டிக்காட்டுங்கள். இல்லையென்றால் ஏமாற்றிவிட்டோம் என்று இறுமாப்பில் இருப்பார்கள். தாம் செய்வதை தவறு என்றே மறந்து விடுவார்கள். 

தவறு எனத் தைரியமாக சுட்டிக்காட்டிய அன்று நீங்கள் நிம்மதியாக தூங்கினால், நீங்கள் மண்ணித்துவிட்டீர்கள் என்று அர்த்தம். அன்று அவனால் தூங்க முடியாமல் தவித்தான் என்றால் அவன் திருந்திவிடுவான் என்று அர்த்தம்.

ஏமாறுவதற்கு பழகிவிட்டோம். குறைவாக ஏமாற்றுபவர்களை நல்லவர்கள் எனறு ஏற்றுக்கொள்ளவும் பழகிவிட்டோம்.

கண்டு கொள்ளாமல் விடப்படும் தவறுகள் வரவேற்கப்படும் தவறுகள் என்பதை மறந்து விடாதீர்கள்.

No comments :

Post a Comment