Friday 6 February 2015

சர்வீஸ் சென்டர் மோசடிகள்

நம்மை ஏமாற்றத்தான் போகிறார்கள் என்றே தெரிந்தே செல்கிற இடங்களில் ஒன்று டூ வீலர் மற்றும் கார் சர்வீஸ் சென்டர்கள்.

வாகனங்களை ஒழுங்காக துடைத்துக் கூட வைத்துக்கொள்ள முடியாத அவரச வாழ்க்கையில் நம்மைக் கூட பராமரிக்காவிட்டாலும் வாகனங்களை நாம் பராமரித்தே ஆக வேண்டும்.

லோக்கல் சர்வீஸ் சென்டரில் செலவு குறைவுதான் என்றாலும் ஒரிஜினல் பார்ட்ஸ் என்கிற நப்பாசையில் கம்பெனி சர்வீஸ் சென்டருக்கு சென்றால் அங்கே நம் கிரெடிட் அல்லது டெபிட் கார்டை பதம் பார்த்து விடுவார்கள்.

வாகனம் வாங்கும்போதே முதல் மூன்று அல்லது நான்கு சர்வீஸ்கள் இலவசமாக வழங்கப்படும். பல சர்வீஸ் சென்டர்கள் அத்தகைய இலவச சர்வீஸ்களை அக்கறையோடு செய்வதில்லை. வெறுமன துடைத்துக் கொடுத்து விடுவார்கள்.

அதன் பிறகு பெய்டு சர்வீஸ் எனப்படும் கட்டணப்பராமரிப்பு வரும்போது அவர்களுக்கு நம் மீதும் நம் வாகனம் மீதும் ஆர்வம் வரும்.

வாகனப்பராமரிப்பு அல்லது பழுது நீக்க கொண்டு விடும்போது அவர்கள் தரும் உத்தேச செலவுப்பட்டியலை பார்த்து நீங்கள் ஒன்றும் சொல்லாமல் வந்து விட்டால் சர்வீஸ் முடிந்த பிறகு வழங்கப்படும் பில்லில் முதலில் சொல்லப்பட்டதை விட தொகை கூடிவிடும்.

ஒரு வேளை  எஸ்டிமேஷனைப் பார்த்து நீங்கள் மலைத்தால், "இது அப்ராக்ஸிமேட் எஸ்டிமேஷன்தான் சார். முடிஞ்ச அளவிற்கு குறைச்சிடறோம்" என்பார்கள்.

( அப்படி ஒரு வேளை குறைத்தால் நீங்கள் பூர்வ ஜென்ம புண்ணியம் என்று சொல்லப்படுவதில் நம்பிக்கை கொள்ளலாம். )

நீங்கள்  காரை சர்வீஸிக்கு கொடுத்துவிட்டு வந்த அடுத்த சில மணி நேரத்தில் உங்களுக்கு போன் வரும்.  "அண்டர் கோட்டிங் பண்ணிடுங்க கல் அடிபடாமல் இருக்கும்." " பெயிண்ட் பாலிஷ் செய்து விடுங்கள் கண் அடி படாமல் இருக்கும்" என்று பில் தொகையை ஏற்ற முயற்சிப்பார்கள். 

அது உங்கள் முதல் கார் ஆக இருந்தால் நீங்கள் பயத்தில் எல்லாவற்றுக்கும் தலையாட்டித்தான் ஆவீர்கள்.

சர்வீஸின் முடிவில் அவர்கள் தருகிற முள நீள பில்லில் எதை மாற்றினார்கள் என்று உங்களால் நிச்சயம் கண்டுபிடிக்க முடியாது. அவர்கள் விளக்கியே சொன்னாலும் பேனட்டிற்குள் உங்களால் மண்டையை விட்டுப்பார்க்க முடியாது. 

சரி சர்வீஸ் சென்டரில் இருக்கும் சர்வீஸ் அட்வைஸர்தானே இதையெல்லாம் முடிவு செய்கிறார் அவரை நட்பாக பழகியோ அல்லது பணிவாகப்பேசியோ கரெக்ட் செய்துவிடலாம் என்று நீங்கள் கணக்கிட்டால் நீங்கள் அப்பாவி என்று அர்த்தம். 

பில் தொகை கூடினால் அவருக்கு இன்சென்டிவ் எனப்படும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பதால் அவர் உங்கள் காரை மனதில் வைத்து திட்டமிடமாட்டார். தனக்கு இந்த மாதம் என்ன இன்சென்டிவ் தேவை என்பதை வைத்தே அனைத்தையும்  முடிவு செய்வார்.

கார் விற்பதற்கு போட்டியிருப்பதால் அங்கே விட்டுக்கொடுத்தாலும் பரவாயில்லை சர்வீஸில் பிடித்துக்கொள்ளலாம் என்பதுதான் நிறுவனங்களின் வணிக தந்திரம்.

சரி இதையெல்லாம் டூ வீலர் மற்றும் கார் வைத்து நாம் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் மாசுக்கான ஒரு தண்டனை என்று மனதை தேற்றிக்கொள்ள வேண்டியதுதானா..?

எனக்குத் தெரிந்த சில தீர்வுகள் :

சும்மா சர்வீஸ் சென்டர் ரிசப்ஷனில் வைத்து எதையெல்லாம் மாற்ற வேண்டும் என வெறுமன சொல்லும் விளக்கங்களால் ஒரு பயனும் இல்லை. கடவுள் இருக்கிறார் என்பதைப்போல வெறுமன நம்பிக்கையின் அடிப்படையில்தான் நீங்கள் தலையாட்டிவிட்டு வரவேண்டும்.

எந்தப்பாகத்தையெல்லாம் மாற்ற வேண்டும் என்று ஏன் முடிவெடுக்கிறார்கள்? எப்படி முடிவெடுக்கிறார்கள்? என்பதை நம் வாகனத்தில் அந்தப் பகுதியை காண்பித்து விளக்க வலியுறுத்த வேண்டும்.

 மாற்றிய பிறகும் அதை நமக்கு காட்டச்சொல்லி வலியுறுத்த வேண்டும். இதை நாம் கேட்டுச்செய்யாமல் கம்பெனிகளாகவே முன்வந்து செய்ய வேண்டும். அல்லது காத்திருப்பாளர் அறையிலிருந்தே நம் வாகனம் சர்வீஸ் செய்யப்படுவதை வீடியோவில் கண்காணிக்க வசதி செய்யப்பட வேண்டும்.

அது வரை இந்தப் புரட்சி போராட்டத்திற்கு ஒரு பிரபு வர வேண்டும் என்று காத்திருப்போம்.

4 comments :

  1. சரியாக சொல்லி இருக்கிறீர்கள் ,சில நாட்களுக்கு முன் என் பைக்கை சர்வீசுககு விட்டேன் ,பில் நாலாயிரத்து ஐந்நூறு ரூபாய் !நான் சொல்லாத வேலையெல்லாம் ஏன் செய்தீர்கள் என்று கேட்டதும்,தப்பு நடந்திருக்கு என்று சொல்லி மூன்றில் ஒரு பாகத்தை பில்லில் குறைத்தார்கள் .,தெரிந்த மெக்கானிக் கூட ஏமாற்றத்தான் செய்கிறான் ,யாரைத்தான் நம்புவதோ ?
    உங்கள் தளத்தை தமிழ்மணம் திரட்டியில் நீங்கள் இணைக்கலாமே ?

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. நன்றி. இணைத்திருக்கிறேன். இதில் உங்கள் அனுபவங்களை பகிர்வதோடு இதைத்தடுக்க உள்ள ஆலோசனைகளையும் தாருங்கள்.

    ReplyDelete