Tuesday 17 February 2015

ஆம்னி பஸ் ; இரவில் நடக்கும் பகல்கொள்ளை.

இவ்வளவு தவறுகளைச் செய்கிற தைரியத்தை அவர்கள் எங்கிருந்து பெறுகிறார்கள் என்று யோசித்துக்கொண்டே இதைப்படியுங்கள். அல்லது யோசித்து விட்டு படியுங்கள்.

போன ஜென்மத்தில் நீங்கள் பாவம் செய்திருந்தால் உங்களுக்கு ஆம்னி பஸ் பயணம்தான். அப்போது அரசு பேருந்து பயணம் என்கிறீர்களா... அது ஜென்ம ஜென்மமாக பாவம் செய்தவர்களுக்குத்தான்.

எகிறும் பஸ் கட்டணம்.
ஆம்னி பஸ்ஸின் கட்டணம், கூட்டத்தை பொறுத்து அல்லது ஒட்டுநரின் மனநிலையைப் பொறுத்து (அவரேதான் நடத்துனரும்) கூடிக்கொண்டே போகும். 

ஞாயிறு ஒரு கட்டணம். பண்டிகை நாட்கள் என்றால் ஒரு கட்டணம். இதெல்லாம் விட சில உப்புமா பஸ்கள் இருக்கிறது. அவர்கள் நிமிடத்திற்கு ஒரு கட்டணம் சொல்வார்கள்.

திருச்சியிலிருந்து சென்னை செல்லும் பேருந்திற்கு புரோக்கர் ஒரு கட்டணம் சொல்லி அழைத்து வருவார். அங்கு பேருந்து அருகில் நிற்பவர் ஒரு கட்டணத்தில் விற்றுக்கொண்டிருப்பார். நமது ஏமாளித்தனத்தை அவர்களே கணித்து அதற்கேற்ப ஒரு கட்டணத்தை சொல்வார்கள். 

பேருந்தில் ஏறியவுடன் விசாரித்தால் தெரியும், யார் பெரிய ஏமாளி என்று. ஆனால் 'அப்படியெல்லாம் விசாரிக்க மாட்டார்கள்' என்ற அந்தக் கொள்ளையார்களின் நம்பிக்கையை நாம் காப்பாற்றிவிடுவோம்.

நம்ம நேரம் நல்லா இருந்தா பஸ் கிளம்பும்.
பேருந்து இருக்கைகள் நிறைவடையும் வரை பஸ் சும்மா கிளம்புகிற மாதிரி பாவலா செய்து கொண்டே இருப்பார்கள். பஸ் கிளம்பிடுச்சு என்று நம்மை டிக்கெட் போட்டு ஏற்றிய பிறகு பஸ் நின்ற இடத்திலேயே இரண்டு மணி நேரம் உறுமிக்கொண்டே இருக்கும். இது நவீன சத்திய சோதனை. ஆனால் எவ்வளவு அடிச்சாலும் நாம் தாங்குவோம் என அவர்களுக்குத் தெரியும்.

பணம் எல்லா கறையையும் கழுவிவிடும்.
எங்காவது ஆம்னி பஸ்  விபத்தானால் எந்தப் பேப்பரிலும் செய்தி வராது. தப்பித்தவறி வந்தாலும் பெயர் வராது.  பணம் எல்லா கறையையும் கழுவிவிடும்.

கட்டணக்கொள்ளைகழிப்பறை
இவ்வளவையும் தாண்டி பேருந்து கிளம்பினால், அடுத்து அவர்களுக்கு எங்கே ஒசிச் சாப்பாடும் கமிஷனும் தருகிறார்களோ அங்கேதான் பேருந்தைக் கொண்டு போய் நிறுத்துவார்கள்.

அங்கே திறந்தவெளி புல்வெளி பல்கலைக்கழகத்தை தேடி அலைபவர்களை குச்சி வைத்துக்கொண்டு துரத்துவார்கள். பிறகு அங்குள்ள கழிப்பறையை வைத்துதான் அவர்களுக்கு வாழ்வே நடக்கிறது.

அநியாய விலைக்கடை
தரமற்ற உணவு. சுகாதாரமற்ற சூழல். அல்லது அநியாயமான விலை. இதில் ஆச்சரியம் என்னவென்றால் நீங்கள் என்ன செய்தாலும் எங்கள் ஆதரவு உண்டு என்பதுபோல பணிவோடு நடந்து கொள்வார்கள் நம்மவர்கள்.

பயணிகளை மிதிக்க வேண்டும். 
பயணிகளை மதிக்க வேண்டும் என்பதை யாரோ இவர்களுக்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு பயணிகளை மிதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருப்பார்கள் போல.  

வாடிக்கையாளர்களை மதிக்க வேண்டும் என்ற சொன்ன மகாத்மா காந்தியே இந்தப் பேருந்தில் பயணம் செய்தால் கூட இவர்கள் மதிக்க மாட்டார்கள். 

ஒருமுறை திருச்சியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த போது பெருங்களத்தூரில் வண்டியை நிறுத்தி ‘டைம் ஆயிடுச்சு. தாம்பரம் போகாது.’ என்றார்கள். பேருந்தில் இருந்த பாதிக்கும் மேற்பட்ட பயணிகள் தங்களுக்கு புலம்பிக்கொண்டே இறங்கினார்கள். தாம்பரம் போகும் கிண்டி போகும் என்று சொல்லித்தானே ஏற்றினார்கள். அது அவர்கள் காதுக்கே கேட்டிருக்காது. அவர்களின் சோம்பேறித்தனத்திற்கும் அலட்சியத்திற்கும் பயணிகள் எல்லோரும் பணிவோடு பலியானார்கள்.

இதையெல்லாம் கேட்டால் பிஸினஸ் என்பார்கள். எல்லோருமே இப்படித்தான்.

இந்தக் கொள்ளையை எல்லாம் நாம் பொருட்படுத்துவதே இல்லை என்ற மனநிலையை மாற்ற இது அநியாயம் என்று சொல்லுங்கள். கோபமாக சொல்ல பயமாக இருக்கிறதா? சிரித்துக்கொண்டே நிதானமாக சொல்லுங்கள்.

இந்தப் பொருட்களை நீங்கள் வாங்குகிற இடத்தில் இந்த விலை சொன்னால் உங்களுக்கு எப்படி வயிறு எரியுமோ அப்படித்தான் உங்களிடம் வாங்குபவர்களுக்கும் இருக்கும் என்று சொல்லுங்கள்.

அல்லது யாராவது இதைப்பற்றி பேசுகிறார்களா.. உடனே அவர்களோடு சேர்ந்து கொண்டு சத்தமாக பேசுங்கள்.

ஏமாற்றுகிறவர்களுக்கு எதிரான குரல்கள் சத்தமாகவும் ஒன்றாகவும் ஒலிக்கும்போது இதெல்லாம் ஒருநாள் ஒழிந்துவிடும்.


அதுவரை தினமும் குளிக்கும்போது முதுகுப்பக்கம் நன்றாக தேய்த்து குளியுங்கள். அப்போதுதான் முதுகெலும்பு என்ற ஒன்று நமக்கு உள்ளது என்பது நினைவிற்காவது வரும். 

4 comments :

  1. பல சமயம் திருச்சி முதல் சென்னை வரை செல்ல 700-1000 கேட்கிறார்கள்.
    இந்த ஆம்னி பஸ் இவ்வளவு தான் வசூலிக்க முடியும் என்று அரசு வரம்பு செய்தால் என்ன ?

    ReplyDelete
  2. லாபத்தில் கூட்டாளிகளாக இருப்பவர்கள் இதைச் செய்வார்கள் என்றா நினைக்கிறீர்கள்? இப்படி வசூலிக்க ஏதுவாக அரசு பேருந்துகள் அனைத்தும் ஈயம் பித்தளைக்கு பேரிச்சம் பழம் என்கிற நிலையில் வைத்திருப்பவர்கள் அவர்கள்தானே..

    ReplyDelete
  3. வயிற்றெரிச்சல்தான் வருகிறது.

    ReplyDelete
  4. ஐயா வணக்கம். வயிற்றெரிச்சல் வருகிற நேரங்களில் பச்சைத்தண்ணீர் அருந்தக்கூடாது . அடங்கிவிடும். சுடு தண்ணீர்தான் அருந்த வேண்டும். அப்போதுதான் சூட்டை தக்க வைக்க முடியும். தவறுக்கு எதிராக சிந்திக்கவாவது செய்வோம். பதில் பதிவுக்கு நன்றி.

    ReplyDelete