Thursday 5 March 2015

இந்தியாவுடைய மகளும் ; இந்தியாவுடைய மகன்களும்...


ஆண் திமிர் அடைந்திருக்கிற உச்சத்தின், குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டுகிறது, இந்தியாவின் மகள் ஆவணப்படம்.

குற்றவாளிகளில் ஒருவன் பேட்டியில் "பாடம் கற்பிக்கவே இதைச் செய்தோம்" என்கிறான். நீதியும், சிறையும் அவனுக்கு எந்தப் பாடத்தையும் கற்பிக்காததால் அப்படி பேச முடிந்திருக்கிறது. 


அவன் பேசிய ஒவ்வொரு வரிக்கும் ஒரு தூக்குத்தண்டனை தரலாம். இதயம் இல்லாத ஒருவன் எப்படி பேசுவான் என்பதற்கு ஒரு உதாரணமாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

குற்றவாளிகளின் வழக்காளி  ( வழக்கு அறிஞர் என்று எழுத மனம் ஒப்பவில்லை)  பேட்டியில் சொல்லியிருப்பது இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது.


மாலை ஆறு மணியானால் பெண்களை எல்லாம் வீட்டுக்குள் வைத்து பூட்டி விட வேண்டும் என்கிற ரேஞ்சிற்கு பேசுகிறான். வன்முறையைத்தூண்டும் விதத்தில் பேசிய குற்றத்திற்காக நீதி மன்றம் தானாக முன் வந்து இவன் மீது வழக்கு போடலாம்.



ஆவணப்படம் எடுத்தவர்கள் இவன் வீட்டு பெண்களிடமும் பேட்டி எடுத்திருக்க வேண்டும். ஒரு வேளை தன் சொந்த வீட்டுப் பெண்களின் கையாலேயே ஒருவன் செருப்படி வாங்குவதை காட்ட வேண்டாம் என்று விட்டு விட்டார்களோ என்னவோ..

காலம் நீண்டு கொண்டே செல்லுகிறபோது இந்தத்திமிரும் உயர்ந்து கொண்டே செல்லுமோ?

நாளை நம் சகோதரிகள், குழந்தைகள் நடமாடுகிற தேசமாக இது இருக்குமா? 

சினிமா, டீவி,  பத்திரிக்கைகள், விளம்பரங்கள், பொருட்களின் அட்டைகள், போஸ்டர்கள் என எதிலும் பெண்களை உடல்களாக மட்டுமே அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.


சினிமாவில் கதாநாயகர்கள் பலர் கதாநாயகிகளிடம் பொறுக்கிகளாகவே நடந்து கொள்வதால் அதைப்பார்த்து வளர்கிற இளந்தலைமுறை பொறுக்கித்தனங்களையே நாயக அம்சம் என தானும் பின்பற்றுகிறது.

இந்தச்சூழலில் இந்தியாவின் மகள் ஆவணப்படத்தை ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியிலும் இருபால் மாணவர்களுக்கும் திரையிட்டு அதைப்பற்றி குழுவாக விவாதங்கள் நடத்த ஊக்குவிக்க வேண்டும். ஆண் திமிர் உருவாகும் காரணங்களை அவர்களாகவே கண்டறிய உதவ வேண்டும்.


தவறான நம்பிக்கையை ஏற்படுத்த கொழு கொழு குழந்தைகளின் படங்களை ஊட்டச்சத்து உணவு விளம்பரங்களில் பயன்படுத்தக்கூடாது என்று தடை செய்த மாதிரி பெண்களை விற்பனை பொருட்களின் விளம்பரங்களில் கவர்ச்சிக்காக பயன்படுத்தக்கூடாது என்றும் தடை கொண்டு வர வேண்டும்.

பெண்களைத் துரத்தி துரத்தி காதல் என்ற பெயரில்  டார்ச்சர் செய்ய கற்றுத்தரும் சந்தான சினிமாக்களை சென்ஸார் செய்யாமல் அனுமதிக்கும் அதிகாரிகளுக்கு இந்த ஆவணப்படத்தை போட்டு காட்ட வேண்டும்.  கும்பலின் மனோபாவத்தை உருவாக்குவதில் இதுபோன்ற படங்களின் பங்கை அவர்களுக்கு புரியவைக்க வேண்டும்.


முகேஷ் சிங் சொன்னதில் ஒரு வார்த்தை மட்டும் எனக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

"9 மணிக்கு மேல் வெளியில் சுற்றும் பெண்களுக்கு பாடம் கற்றுத்தரவே இதைச் செய்தோம்."

இன்னொரு இந்தியாவுடைய மகள் உருவாகமல் இருக்க வேண்டுமென்றால் இந்தியாவுடைய மகன்களுக்கு நாம் கற்றுத்தரவேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது.

12 comments :

  1. Nice article, but the idiot govt is acting with head in the sand attitude

    ReplyDelete
    Replies
    1. தலையை மண்ணுக்குள் மறைத்துக்கொள்வதால் பூமி இருண்டு விடாது. தவறு செய்தவர்களின் பேச்சு வெளிவரக்கூடாது என்று நினைப்பதற்கு பதில் தவறான எண்ணங்கள் இனிமேல் யாருக்கும் வரக்கூடாது என்று அரசு யோசிக்கப்பழக வேண்டும்

      Delete
  2. இந்திய அரசியல்வாதிகள் இதை ஏன் தடுக்கின்றார்கள் தெரியுமா? இந்திய அரசியல்வாதிகள் பலரும், அரசியல்வாதிகளோடு புள்ளை, மாமன், மச்சான் என பலரும், அரசியலதிகாரிகள் பலரும், அவர்களுக்கு மாமூல் கொடுக்கும் பலரும், என பல பல பல பேரும் கேப்மாறிகள் தான். நம் நாட்டை நடத்திட்டு இருக்கும் கூட்டத்தில் முக்கால்வாசி பேர் இப்படி பல பெண்களுடைய வாழ்க்கையைச் சீரழித்துவிட்டு பணத்தால், பலத்தால், சட்டத்தின் சந்து பொந்தில் பெருச்சாளி வக்கீல்கள் சிலரை வைத்து தப்பி வந்த கேடு கெட்ட கூட்டம் தான். அதான் பாலியல் குற்றத்துக்கு எதிரான போராட்டம், அதனை சொல்லும் ஆவணப் படம் என எல்லாவற்றையும் தடுத்து நிறுத்தி மூடி மறைத்து மண் போடப் பார்க்கிறது. இதற்கு இவர்கள் சொல்லும் சாக்கு போக்கு கலாச்சாரம், பண்பாடு, பன்னாட்டு சதி, தேசப் பக்தி, கலாச்சார சீரழிவு என்ற மனபோதை சொற்கள்... ஆனால் நவீன உலகில் இணைய பெருவெளியில் நிஜங்களை மூடி மறைத்துவிட முடியாது....

    ReplyDelete
    Replies
    1. 200 எம்.பிக்களுக்கு மேல் இதுபோன்ற வழக்கில் சிக்கியிருக்கிறார்கள் என்ற வரிதான் இந்த ஆவணப்படத்தை தடுக்கும் ஒரே இடம். நேற்று பார்த்த அந்த வீடியோவை டவுன்லோடு செய்யாமல் விட்டுவிட்டேன். இன்னும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதை பார்க்க வேண்டும். தவறு செய்கிற எண்ணமே இல்லாத ஒரு தலைமுறையை நாம் எல்லாம் இணைந்து உருவாக்க வேண்டும். நன்றி

      Delete
  3. நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன் வரது.
    என் மனக்குமுறலை அப்படியே உனது எழுத்தில் பார்த்தேன். குற்றவாளிகளின் வழக்குறைஞன்,
    “மாலை ஆறு மணியானால் பெண்களை எல்லாம் வீட்டுக்குள் வைத்து பூட்டி விட வேண்டும்“ என்கிற ரேஞ்சிற்கு பேசுகிறான். வன்முறையைத்தூண்டும் விதத்தில் பேசிய குற்றத்திற்காக நீதி மன்றம் தானாக முன் வந்து இவன் மீது வழக்கு போடலாம்“ என்பது உண்மையெனினும், “ஆவணப்படம் எடுத்தவர்கள் இவன் வீட்டு பெண்களிடமும் பேட்டி எடுத்திருக்க வேண்டும். ஒரு வேளை தன் சொந்த வீட்டுப் பெண்களின் கையாலேயே ஒருவன் செருப்படி வாங்குவதை காட்ட வேண்டாம் என்று விட்டு விட்டார்களோ என்னவோ.“ என்ற உன் கிண்டலைப் பெரிதும் ரசித்தேன். அருமை. இந்தப் படத்தைத் தடைசெய்த ஆண்-அரசியலையும் கவனி.

    ReplyDelete
    Replies
    1. வீட்டில் பெண்களோடு வளர்ந்த யாராலும் கண்கலங்காமல் அதை பார்க்க முடியாது. அனுவை பார்க்க வேண்டாம் என்று தடுத்துவிட்டேன். அவரால் அதைத்தாங்கிக் கொள்ள முடியுமா? என்று தெரியவில்லை. தன்னிடம் திருடியவனிடம் கூட மண்ணித்து அவன் தேவைகளை உடனே நிறைவேற்றிக் கொடுத்த அந்த தேவதை இப்போது இருந்திருந்தால் இந்த திருடர்களையும் மண்ணித்திருக்கக்கூடும் என்றுதான் இயற்கை தன்னிடம் அழைத்துக்கொண்டது போல...

      Delete
  4. அய்யா வணக்கம்.
    சமூக அக்கறையுள்ள பதிவு!
    தங்களின் அறச்சீற்றம் செவிடர்களின் காதைப் பிளக்கட்டும்!
    தங்களைத் தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. சீண்டுவார் இல்லை என்பதுதான் தவறு செய்பவர்களுக்கு தைரியம் தருகிறது.. சீறுவோர் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் அதுவும் அவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள் என்று தெரிந்தால் குறையும். ஒரு நாள் நிற்கும் . அதுவரை ஒன்றாகத் தொடர்வோம்.

      Delete
  5. நான் இதனை தாளில் பார்த்த போது வந்த ஒவ்வொரு வார்த்தைகளும் உங்கள் பதிவில். அருமை. அவன் வீட்டு பெண்களால் செருப்படி வாங்கியிருப்பான்.நான் படம் பார்க்கவில்லை, ஒருவேளை அவன் என நினைத்து என் போருள் போயிருக்கும் நோருக்கியிருப்பேன். இது போல் ஒன்றை எடுத்தே கண்டிக்க தகுந்தது. இந்த தீமிர் பிடித்த வார்த்தைகள் இன்னும் எத்தனை உருவாக்குமோ என்ற பயம் ,,,,,,,,,,,,,,,தொடர்கிறது மனதில், நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பெண்களை மதிக்கிற பழக்கம் என் அப்பாவிடம் இருந்து எனக்கு வந்தது. சிறு வயதிலிருந்தே வீட்டிலிருக்கும் அனைத்து வேலைகளையும் நான் என் தம்பி தங்கை அனைவரும் பகிர்ந்து செய்வோம். அம்மாவை மதிக்கிற அப்பாவை பார்த்து வளர்வது பெண்களை மதிக்கும் தலைமுறையை உருவாக்குவதின் தொடக்கம்.

      Delete
  6. பகிர்வுக்கு நன்றி,ஐயா!

    ReplyDelete
    Replies
    1. படித்ததற்கு நன்றி

      Delete