Tuesday 3 March 2015

4 வயது குழந்தையை குடிக்க வைத்த கொடூரன்

ஹாய் நண்பர்களே என் சகோதரி மகன் பிராந்தி குடிப்பதை பாருங்கள்.

என்ற வரிகளோடு முகநூலில் பார்த்த அந்த வீடியோ ஒரு நிமிடம் என்னை அதிரச்செய்தது. 

டாஸ்மாக் கலாச்சாரத்தில் உச்சம்

ராம்குமார் என்றொருவன் தன் அக்காவின் நான்கு வயது குழந்தைக்கு பிராந்தி ஊற்றிக்கொடுத்து அந்தக்குழந்தையை ஊக்கப்படுத்தி குடிக்க வைத்து வீடியோ எடுத்து தன் முகநூலில் பதிவேற்றம் செய்திருக்கிறான்.

குடிபோதையில் தன்னிலை மறந்த நிலையில் செய்ததா? இல்லை முகநூல் போதையில் அதிகம் பேர் ஷேர் செய்யும் வீடியோவை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தன்நலத்தில் செய்ததா? தெரியவில்லை.

இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் ராம்குமாரை அசிங்கமாக திட்டி தீர்த்துவிட்டார்கள். இதற்குப்பிறகும் கூட ராம்குமார் அந்த வீடியோ பதிவை தன் பக்கத்திலிருந்து நீக்க வில்லை.

இது அவன் அக்காவுக்கு இந்நேரம் தெரிந்திருக்குமா? என்று தெரியவில்லை. சிலர் காவல்துறையில் புகார் கொடுப்போம் என்று சொன்னதைக்கூட அவன் கண்டு கொண்டதாகத் தெரிய வில்லை.

அந்தப்பத்கத்தில் இருந்த இன்னொரு புகைப்படம் அவன் மனநிலையை சொல்வதாக இருக்கிறது.

எல்லாப்போதையுமே ஆபத்தானது. அழிவைத்தரக்கூடியது.

இப்படி கிறுக்குத்தனமாக வீடியோ எடுப்பதற்கு குழந்தைகளை பலிகடா ஆக்குபவர்களுக்கு நம் சட்டத்தில் என்ன தண்டனை உள்ளது?

கல்லூரியில் பணியாற்றும் நண்பர் ஒருவர் தன் மூன்றாவது படிக்கும் தன் மகனுடன் சோடா கடைக்கு சென்றுள்ளார்.

ஆப்பள் சுவை சோடா வாங்கி இருவரும் குடித்திருக்கிறார்கள். முதல் மிடறு விழுங்கிவிட்டு பையன் சொன்னானாம், "அப்பா சரக்கடிச்ச மாதிரி இருக்கு"

நண்பர் அதிர்ந்து போய், "உனக்கு எப்படி இந்த வார்த்தை தெரியும்?" என்று கேட்டிருக்கிறார்.

"டீவியில, சினிமா எல்லாம் ஜீஸ் குடித்துவிட்டு இப்படித்தான் சொல்வார்கள்" என்றிருக்கிறான் அப்பாவியாக..

நண்பர்களே .. எங்கே போகிறது நம் தேசம்?  நம் இளைய தலைமுறை?


No comments :

Post a Comment